Friday, 8 April 2011

ஆதரவு குரல்களே!... உங்கள் குரல்கள் எதற்காக?...





காமென்வெல்த் ஊழல், அலைக்கற்றை ஊழல், உலக கோப்பை கிரிக்கெட் என அடுத்தடுத்த பருவத்தில் தம் தலைப்புச்செய்திகளை பூர்த்தி செய்த இந்திய ஐக்கிய ஊடகங்கள் சில நாட்களாக திரு.அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான உண்ணாவிரதத்தை தங்கள் தலைப்புச்செய்தியாக பதிவுசெய்து வருகின்றனர்.

ஊழலுக்கெதிராக அந்த ஒற்றை மனிதரின் அகிம்சைப் போர் கடந்த சில மாதங்களில் ஊடகங்கள் மூலம் நடுவணரசுக்கு ஏற்பட்ட நெருக்குதலைக் காட்டிலும் பல மடங்கு தந்துவருகிறது.ஊழல் செய்வோரை கடுமையாய் தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை எந்த இழுபறியுமில்லாமல் நிறைவேற்றத்தான் இந்த உண்ணாநிலை நடந்துவருகிறது.இத்தனை பரபரப்பும் கிளம்பக் காரணம் இரண்டே இரண்டுதான்,.1.இந்த கோரிக்கை அரசியல் கட்சிகள் மற்றும் அதிகார மையத்தை நேரடியாய் தாக்குகிறது.2.போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு தந்திருப்பதால் நடுவணரசு இதில் உடனடி தீர்வு காண வேண்டியக் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது..

ஒரு பொதுநலக் கோரிக்கைக்காக நேர்மை நோக்குடனும், தூய்மை மனதுடனும் உண்ணாநிலை மேற்கொள்ளும் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்களே அந்த வகையில் அன்னா ஹஸாரேவின் இந்த போராட்டம் வரவேற்க படலாம். ஆனால் நண்பர்களே நம் ஐக்கிய தேசத்தினுடைய சட்டம் கண்ட தோல்வி நாமறிந்த ஒன்றே அப்படி அந்த சட்டத்திலேயே பெரிய நம்பிக்கையற்ற தன்மை நிலவுகையில் அந்த சட்டம் மூலம் ஊழலுக்கு தீர்வு கிடைக்குமென்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிக மிக முட்டாள்தனம். நம் தேசத்திலும் ஊழலுக்கெதிராக கடுமையான சட்டமுள்ளது என்று தோள்தட்டிக் கொள்ளலாமே தவிர இதனால் ஊழல் ஒழியுமென்பது அம்புலியைக் கையிலடக்கும் கனவே!... மாறாக நல்லமனிதர் பினாயக் சென் அவர்களை தீவிரவாதியென்று கைது செய்து சிறையிடப்பட்டதைப் போல் எப்படி வேண்டுமானாலும் நம் ஐக்கிய தேசத்தின் சட்டம் பாயும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


என் வருத்தமெல்லாம் நேர்மையான ஒரு உண்ணாநிலை பரபரப்பு ஊடகங்களால் முக்கியமாக தொலைக்காட்சி ஊடகத்தால் விறுவிறுப்பான அரசியல் படமாக திரிக்கப்படுவது வேதனை தருகிறது…”நாங்களும் நல்லவனுங்கதானுங்கோ” என்று சில அரசியல் கட்சிகளும்,ஆர்வலர்களும் அங்கே சென்று போஸ் கொடுத்து வருகின்றனர். இது போதாதென்று தினமிரவு வட இந்திய சாலமன் பாப்பையாக்கள் & பாப்பம்மாக்கள் கொண்டு பட்டிமன்றம் வேறு,.. பிரச்சனைக்காக ஆதரிக்கிறார்களா அல்லது பெருமைக்காக ஆதரிக்கிறார்களா என்று தெரியாதவாறு குரல் தரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள். விடாத இந்த விறுவிறுப்புக் காட்சிகளால் நம் ஐக்கிய அரசியலுக்கு நன்மையுண்டோ இல்லையோ இதை பரப்பரப்பாக்கி டி.ஆர்.பி ரேட்டிங் அதிகம் பெற்றதில் தொலைக்காட்சிகளுக்கு குஷியோ குஷி…...

பொதுவாக கருத்து கூறுவர்களில் இரு ரகமே அதிகமுண்டு அவ்வகை மக்களை இணைய சமூக இனைப்பகங்களில் அதிகம் காணலாம்.
1. எல்லாவற்றிக்கும் ஓ போடுபவர்கள்,(Optimists)
2. எல்லாவற்றிக்கும் சீ போடுபவர்கள்(Pessimists)
ஒரு செயலை அல்லது செய்தியையும் பகுத்தறிந்து, நுனுக்கமாக அரசியல் விளைவ சரிபார்து ஒரு முடிவுக்கு வருகிறவர்கள் அதாவது சூழ்நிலையின் பொருளறிந்து கருத்தைக் கூறும் சிந்தனையாளர்கள் மிகக் குறைவு.. எந்தவொரு செய்தியையும் மேலோட்டமாய் பார்த்து ஓ போடுவதும் சரி, சீ போடுவதும் சரி, இரண்டுமே தவறு தான் தோழர்-தோழிகளே!...
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" -குறள்423:அறிவுடமை.
இந்த குறள் உங்கள் நினைவிலிருந்தால் எல்லா நேரங்களிலும் உங்கள் முடிவு சரியாகவே இருக்கும். தற்போது நடக்கும் உண்ணாநிலை களேபரங்களிலும் உங்கள் சிந்தனையைத் தனித்து பதிவு செய்ய முடியும்…

உலகக்கோப்பைக் கிரிக்கெட்டிலிருந்தே தொடங்கிய கடந்த வார தேசப்பற்றை தொய்வில்லாமல் இன்னுமொரு வாரம் தொடரும் என் ஐக்கிய தேச தோழர்களைக் கண்டால் மெய்சிலிரிக்கிறது ஆனால் இன்னும் எத்தனை வாரத்துக்கு தொடர்வார்கள் என்றுதான் தெரியவில்லை.. இன்று அன்னா ஹஸாரேவிற்கு பூரிப்போடு குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள்,அரசியல் கட்சியனர் மற்றும் பொதுமக்களே உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி

ஐரோம் ஷர்மிளா(Irom sharmila) பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?.. உங்களில் எத்தனைப் பேருக்கு அந்த இரும்பு பெண்மனி பற்றித் தெரியும்?..அவரைப் பற்றி தெரிந்தவர்கள் நிச்சயமாய் இந்த உண்ணாநிலைக் காட்சிகளை வேடிக்கையோடே கண்டுகளித்திருப்பார்கள். சுமார் பதினோறு ஆண்டுகளாக இந்திய ஐக்கிய அரசின் “இரானுவ சிறப்பதிகார சட்டம்” திரும்ப பெறக்கோரி உண்ணாநிலை இருந்து வருகிறார்.. காலை சிற்றுண்டி மற்றும் மதிய சாப்பாட்டுக்கு நடுவில் உண்ணாநிலையிருக்கும் தலைவர்களால் உண்ணாநிலை அசிங்கப்பட்டுவிட்டது… இவர்களுக்கு நடுவில் ஷர்மிளா இமாலய உயரத்திலிருக்கிறார் இதுவரை நடுவணரசும்,ஊடகங்களும், பொதுமக்களும் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை அவரைக் கண்டுகொண்டப் பிறகு ஹஸாரேவின் உண்ணாநிலைக்கு கைதட்டும் எண்ணம் எனக்கு வரவில்லை… ஏனெனில் ஹஸாரேவின் உண்ணாநிலையின் நோக்கம் நேர்மையானது அவரும் நேர்மையானவர் ஆனால் அவரிருக்கும் இந்த உண்ணாநிலை செயற்கையாகிவிட்டது…அரசியலாட்டமாகிவிட்டது… ஒரு சட்டத்தை சேர்க்க ஹஸாரே விரும்புகிறார் ஒரு சட்டத்தை எடுக்க ஷர்மிளா விரும்புகிறார்… ஹஸாரேவின் கோரிக்கை நிறைவேற்றப் படாததால் வரும் தீமைகளைக் காட்டிலும் ஷர்மிளாவின் கோரிக்கை நிறைவேற்றப் படாததால் வரும் தீமையே அதிகம்… ஆனால் அந்த இரும்பு தாய்க்கு எத்தனை குரல்கள் எழும்பின…? பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதை அறிந்தா மக்கள் குரல் கொடுக்கிறார்கள்?...மனிப்பூரில் அந்த பெண்மனி உண்ணாநிலையிருக்கும் இடம்வரை ஊடகங்களால் செல்ல முடியவில்லையா?....

பதினோறு ஆண்டுகளாக உண்ணாநிலை மேற்கொண்டுவருபவரை இந்த முறையாவது தேசத்துக்கு அடையாளப் படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமை அதை அவர்கள் செய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன் ஊடகங்களுக்கு கடிதமும் எழுதிவிட்டேன்…. 2005-ம் ஆண்டு கவிஞர்.ஷர்மிளா நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் எனினும் அங்கே நிலவிய அரசியலால் விருது பெற முடியவில்லை. அவர் மீண்டும் நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது பெறுவாரேயானால் அன்று தான் நம் தேசம் அவரை அடையாளம் காணப்போகிறதா?...அன்றுதான் அவர் கொண்டாடப்படப் போகிறாரா?...

என் இந்திய ஐக்கிய தேசத்து மக்கள் ஆதரவு குரல் கொடுப்பதில் வல்லவர்கள் ஆனால் அவர்கள் எதற்காக குரல் கொடுக்கிறோம் என்பதை அதிகம் ஆராய மாட்டார்கள். அவர்கள் கொடி பிடிப்பது பிரச்சனைக்காகவா அல்லது பெருமைக்காகவா என்று புரியாது..... தன் எச்சைக் கையை விட மற்றவன் கையை கழுவுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள்… தேசியநலனுகாக கூடும் பொதுநலவாதிகளின் பல கூட்டம் ஊழல் ஒழிப்பதில் அவர்கள் விருப்பங்கள் பாதிக்குமேயானால் சுயநலத்தோடு கூட்டம் கலைந்துவிடும்... ஹஸாரேவிற்கு ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையொழிக்க முடியாது....” என்ற பாடலை அர்பணிக்கிறேன்…. திருட்டையொழிக்கும் சட்டத்தை திருடனிடமே கேட்டு பெற வேண்டிய சூழ்நிலையில் இன்று இந்திய ஐக்கியம் சிக்கிக்கொண்டிருப்பதை நினைத்தால் சிலிர்க்கிறது...

8 comments:

Unknown said...

உண்மையாண கருத்துக்கள் கொண்ட நல்ல பதிவு வாழ்த்துக்கள் மேன் மேலும் நாம் தொடர...Shahul M.Kasim

மௌனதாசன் said...

மிக்க நன்றி!... நிச்சயம் தொடருவோம்

Ashok said...

@மவுனதாசன்
அருமையான பதிவு தல. சூப்பர்.

thalasatish said...

பேச்சை விட எழுத்தின் வலிமை அதிகம்

thalasatish said...

டாய் மவுனதாஸ் சங்கரா நீ கூட இப்படி எல்லாம் யோசிப்பியா?..
பரவால உன்ன என் அண்ணன்னு சொல்றது சந்தோஷமா இருக்கு!...
ஏடாகுடமா பேசிடாத எவனாவது போட்டுத்தள்ளப் போறான்

Anonymous said...

Nanry

Anonymous said...

nalla pathivu... oru sirantha thalaiyangam pola irunthathu...

Ezhil Arasu said...

Super

Post a Comment